Sunday, September 11, 2016

MANATHIRUPTHY TAMIL STORY

மனத்திருப்தி

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.

ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது.“ ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் “அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.” என்றார்.

“இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.

“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” என்றார் கல்தச்சர்.

அதற்கு “ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிரிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்றார் வழிப்போக்கர்.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார் “யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிரியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”.

நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.

1 comment: