Wednesday, August 31, 2016

aatai kaanom tamil story

ஆட்டைக் காணோம்!

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.

அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..

ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.

அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.

அதற்கு முனிவர், “மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.

“நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.

அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. “என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.

“உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.

அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

நீதி : நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.

kuyil doctor tamil story

குயில் டாக்டர்!

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.

ஒரு நாள், “அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் துõங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?” என்றது.

“நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அத னால் தான் நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,” என்றது தாய் ஆந்தை.

“ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?” என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.

“கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றது தாய் ஆந்தை.

“அப்படி என்ன தவறு செய்தார்?” என்று கேட்டன குஞ்சுகள்.

“ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.

“குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.

“இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.

“பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு துõங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.

“அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

“அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

“நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,” என்றது தாய் ஆந்தை.

“அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,” என்றனர்.

செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.

suyabuthi tamil story

சுயபுத்தி!

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர். இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது... இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; கொடுமைக்கார ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி : மற்றவர்களைப் பற்றி கவலைபடாமல் நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்ய வேண்டும். சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

raja nalla raja tamil story

ராஜா நல்ல ராஜா!

நாட்டரசன்புரம் என்ற நாட்டை மார்த்தாண்டன் என்ற மன்னன் ஆண்டார். அவர் தனது நாட்டில் பல சிரமங்களுக்கிடையில் மிகப்பெரிய பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார். அதில் எல்லாவகையான பூச்செடிகளையும் வளர்த்தார்.

பல நிறத்தில் பூமரங்களையும் அமைத்தார். பூமரங்களை ஒட்டி நல்ல காய், கனிகளைத் தரும் மரங்களையும் அமைத்தார். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்ற புற்களையும், புல்லின் நடுவே தரையில் படரும் சிறிய பூச்செடி வகையும் வளர்த்தார்.

மரங்களிலும் புதர்களிலும் உயர்ந்த சாதிப் பறவைகளையும், முயல், அணில் போன்றவைகளையும் வளர்த்தார். வைரத்தை தங்கத்தில் பதித்தது போல பொன்னிற புள்ளி மான்கள் அந்தத் தோட்டத்தில் அங்குமிங்கும் துள்ளியோடின.

அந்தத் தோட்டத்தைக் கண்டால் மனம் அமைதியடையும். கவலைகள் மறந்து போகும். அப்படி ஒரு அற்புதமாக அந்த தோட்டம் அமைந்து இருந்தது. அந்தத் தோட்டத்தைக் காணவும், ரசிக்கவும் பல தேசத்து ராஜாக்களும் சிற்றரசர்களும் வருவர்.

அவர்களை மன்னர் வரவேற்று உபசரிப்பார். அவர்கள் தோட்டத்தைச் சென்று காண்பர்; பிரமிப்பர். இத்தனை பெரிய இடத்தை வளைத்து இத்தனை எழிலான ஒரு தோட்டத்தை அமைக்க முடியுமா? என்று வியப்பர். எனினும் அந்தத் தோட்டத்தைச் சுற்றி பார்த்துக் கொண்டே வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது முகம் சுளிப்பர்.

ஏனென்றால் அந்த இடத்தில் ஒரு பிரிந்தும் பிரியாததுமாக கிழிந்த காய்ந்த, ஓலைகளுடன் கூடிய ஒரு சிறு குடிசை இருந்தது. அந்தக் குடிசையின் சுற்றுச் சுவர்கள் வெறும் களிமண்ணால் பிசைந்து கட்டப்பட்டு இருந்தது. அந்த ஓலைக் குடிசையை சுற்றி துவைக்கும் கல்லும், முக்கூட்டுக் கற்களால் அடுக்கப்பட்ட ஒரு சிறு அடுப்பும், ஏழெட்டு நைந்து போன துணிமணிகளும், அலுமினியக் குவளைகளும் கிடக்கும். குடிசையை சுற்றி நாகவாளி செடி நிறைந்து இருக்கும்.

இத்தனை அற்புதமான ஒரு தோட்டத்தின் நடுவே இத்தனை கோரமான பஞ்சக்குடிசை ஒன்று ஏன் உள்ளது என்ற யாருக்குமே புரியவில்லை. எனினும் அந்தக் காரணத்தை பேரரசரிடம் கேட்கும் தைரியமோ அல்லது அந்தக் குடிசை இருப்பது தோட்டத்தின் எழிலைக் கெடுப்பதாக உள்ளது என்று கூறவோ யாருக்கும் துணிவே வரவில்லை.

நாட்கள் சென்றன. மகிபாலன் என்றொரு சிற்றரசன் அந்த தோட்டத்தைக் காண வந்தான். வழக்கம் போல மன்னருடன் சேர்ந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபடி அரசனைப் பலவிதமாகப் புகழ்ந்தபடி வந்தான்.

திடீரென அவன் கண்கள் குடிசையைக் கண்டது. உடனே முகம் வாடினான். அத்தனை எழிலான தோட்டத்தில் இப்படி ஒரு ஏழ்மை தோற்றமுடன் கூடிய குடிசை ஒன்று இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

உடனே அரசரிடம், “மன்னா இந்த எழிலான தோட்டத்தில் இப்படியொரு எளிய குடிசை இருப்பதன் காரணம் என்ன?'' என்று கேட்டான்.

உடனே மன்னன், “மகிபாலா! இந்த குடிசை உன்னைப் போன்ற ஒரு தைரியசாலியின் குடிசை. நான் எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தோட்டத்தை உருவாக்க முயன்றபோது ஒரு பெரிய பரப்பளவுடன் கூடிய இடம் எனக்கு மிகவும் அவசியமாகியது. நாடு முழுக்க அமைச்சர் அந்த மாதிரி ஒரு இடத்தைத் தேடிய போது இந்த இடம் அகப்பட்டது. ஆனால், பெரிய இடத்திற்கு நடுவே இந்த குடிசையும் இருந்தது.

“இதில் இருந்த ஏழைக் கிழவியிடம், நீ இந்தக் குடிசையை காலி செய்ய வேண்டும். இங்கு மன்னர் மிகப் பெரிய பூந்தோட்டம் அமைக்க இருக்கிறார்,'' என்று கூறியபோது கிழவி மறுத்திருக்கிறாள்.

விபரமறிந்த நான் நேரில் வந்து, “இடத்தை காலி செய்,'' என்று கூறினேன்.

ஆனால் அந்த பெண்ணோ, “மன்னா! இது என்பாட்டன் பூட்டன் காலத்து குடிசை. இதைத் தாங்கள் அழிப்பதை நான் விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதனை இடிக்கவோ, ஓலைகளைப் பிரித்தெறியவோ நான் மனதார ஒப்புக் கொள்ள மாட்டேன். படைபலம் நிறைந்த நீங்கள் நினைத்தால் என்னை ஒரே நிமிடத்தில் கொன்றுவிடலாம்.

“நான் இறந்த பின்பு இந்த இடத்தை நீங்கள் இடித்து, சிதைத்து உமது தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், நான் இறந்தாலும் எனது பூர்வீகக் குடிசையை அழித்து என் மனதில் வேதனையை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு இறைவன் நிச்சயம் தண்டனையைத் தந்தே தீருவார்,'' என்று கூறி அழுதார்.

“அவள் கண்ணீரில் இருந்த நியாயமும் பூர்வீக நினைவுச் சின்னத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மனோ தைரியத்தால் என்னை எதிர்த்து அவள் பேசிய வீரமும் என் மனதை நெகிழ வைத்தது. அவள் மன உணர்வை மதித்து, நான் இந்தக் குடிசையை அகற்றாமல் இந்தத் தோட்டம் உருவாக்கிய நான்கு, ஐந்து ஆண்டுகளில் அந்தக் கிழவி இறந்துவிட்டாள்.

“அவளுக்குப் பின் இந்தக் குடிசையை ஆள யாரும் சந்ததிகள் இல்லை. என்றாலும் அந்தக் கிழவியின் உணர்வுக்கும், வீரத்திற்கும் ஒரு மதிப்பு தர எண்ணி இந்தக் குடிசையை அகற்றவில்லை,'' என்றார்.

பேரரசரின் பெருந்தன்மையையும், நல்ல பண்பையும் மகிபாலன் வியந்து பாராட்டினான்.

நீதி : மனிதர்களாகிய நாம் மற்றவர்களின் மன உணர்வுகளை மதிக்க வேண்டும். யாரையும் மனம் நோகச் செய்தல் தவறு. மன்னரின் பெருந்தன்மையான குணத்தை நீங்களும் கடைபிடிக்க வேண்டும்.

vedan tamil story

வேடன்!

ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தின் கிளையில் ஒரு புறா எப்போதும் வந்து அமர்வது வழக்கம். அப்படி ஒரு நாள் அந்த மரக்கிளையில் புறா அமர்ந்து அற்றில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது ஆற்று நீரில் ஒரு கட்டெறும்பு சிக்கி தத்தளிப்பதைக் கண்டது. மறுநிமிடம் அந்தப் புறாவிற்கு அந்தக் கட்டெறும்பின் மீது பரிதாபமும், இரக்கமும் பிறந்தது. மறுவினாடி அது ஏதோ சிந்தித்து விட்டு அரச மரத்தின் இலையில் ஒன்றை பறித்து எறும்பு தத்தளிக்கும். இடத்திற்கு சற்று முன்னால் போட்டது.

ஆற்று நீருடன் மெல்ல அடித்து வரப்பட்ட எறும்பு அந்த அரச இலையின் மீது பட்டதும் கப்பென அந்த இலையைப் பற்றிக் கொண்டது. இலைகள் நீரில் அமிழாது அல்லவா? எனவே, அந்த இலையின் மீது ஊர்ந்த எறும்பும் நீருக்குள் அமிழாமல் கரையோரம் இலையுடன் வந்தது.

கரையில் இலை ஒதுங்கியதும் இலையை விட்டு இறங்கியது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த புறாவிற்குத் தனது நன்றியைக் கூறியது. தினந்தோறும் எறும்பும், புறாவும் அதே மரத்திடியில் சந்தித்தன. இரண்டும் நல்ல சிநேகிதர்களாயின.

ஒரு நாள் அந்த மரத்தடிக்கு ஒரு வேடன் வந்தான். அவன் மரக்கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் கண்டான். ஆனால், வேடன் வந்ததையோ, அவன் தன்னைப் பர்த்ததையோ புறா கவனிக்கவே இல்ல.

வேடன் தன் அம்பையும், வில்லையும் எடுத்தான். மரக்கிளையில் இருந்த புறாவை நோக்கி குறி வைத்தான். ஏதும் அறியாத புறா பேசாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. ஆனால், வேடனின் காலடியில் நின்ற எறும்பிற்கு வேடன் தனது நண்பனான புறாவை குறி வைப்பது வெகு எளிதில் தெரிந்துவிட்டது.

உடனே தன் நண்பனின் உயிரை காப்பது எத்தனை அவசியமானது என்பதை உணர்ந்தது. அடுத்த நிமிடம் அந்த வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. எதிர்பாராமல் கட்டெறும்பு கடித்த வலியில் வேடனின் குறி தவறியது. அவன் எய்த அம்பு எங்கோ போய் விழுந்தது.

இப்படி ஏற்பட்ட திடீர் சத்தத்திலும், சலசலப்பிலும் கவனம் சிதறிய புறா வெடுக்கென திரும்பியது. மறுநிமிடம் தனக்கு வரவிருந்த பேராபத்தை உணர்ந்தது. தன் நண்பனான எறும்பு தன்னைக் காப்பாற்றியதையும் உணர்ந்தது. மறுபடியும் வேடன் தன்னை நோக்கி குறி வைக்கும் முன்பாக அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

மறு நாள் தன் நண்பனான எறும்பைப் பார்த்து நன்றி தெரிவித்தது. இரண்டும் ஒன்றின் உயிரை ஒன்று காப்பாற்றிய நன்றியில் கடைசிவரை நட்புடன் இருந்தன.

நீதி : நாம் ஒருவருக்கு உதவினால் நிச்சயம் நமக்கு தேவைப்பட்ட சமயத்தில் உதவ யாரேனும் வருவர்.

somberi tamil story

சோம்பேறி!

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தானம். எந்த வேலையும் செய்யாமல் உண்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள்.

வைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல், ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.

அவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் (சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து) கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம்.

சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.

எதற்கு? எப்போது வேர்க்குமென்று.

அப்போது அவன் மனை சொன்னாளாம் 'நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்' என்று.

அவனும் தன் துணிகளைத் துவைப்பது, தோட்ட வேலை செய்வது, கடைக்குப் போவது, நிலத்தில் வேலை செய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம்.

ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை.

கொஞ்சநாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.

ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.

மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம் "எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது?" என்று.

அதற்கு அவர் "உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குண்மடைந்து விட்டாய். நான் கொடுத்தது மருந்தேயில்லை. வெறும் துளசி, வெல்லம் கலந்தது" என்றாராம்.

அவனும் நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.

udaintha paanai tamil story

உடைந்த பானை!

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

pana mootai tamil story

பணமூட்டை

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

Monday, August 29, 2016

murattu singam tamil story

முரட்டு சிங்கம்!

ஒரு பெரிய மலைப் பிரதேசத்தில் செழித்தோங்கி வளர்ந்த அடர்ந்த காடு. அக்காட்டில் சிங்கம், புலி, கரடி போன்ற பெரிய மிருகங்களும், மான், குரங்கு போன்ற சிறிய மிருகங்களும் வாழ்ந்து வந்தன.

காலம் காலமாக பல வகையான மிருகங்களும் ஒரே இடத்தில் இருந்து வந்ததால் இவை ஒற்றுமையாக காட்டில் வாழ்ந்து வந்தன. ஆனாலும், இக்காட்டிலுள்ள சிங்கங்களில் முரட்டுச் சுபாவமுள்ள சிங்கம் ஒன்று இருந்தது.

அதனுடைய செயல்கள் மற்ற சிங்கங்களுக்குப் பிடிக்காததால் அது தனிமைப் படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலவி வந்தது.

இருப்பினும் காட்டிலுள்ள மான், குரங்கு ஆகியவற்றுடன் முரட்டுச் சிங்கம் நட்பாகவே பழகி வந்தது. அவையும் தனியாக வாழும் முரட்டுச் சிங்கத்தின் மீது பாசமாய் இருந்தன.

இச்சிங்கம் காட்டில் உலாவச் செல்லும் போது, மான்களுடன்தான் செல்வது வழக்கம். நாட்கள் ஆக ஆக மான்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

இதையறிந்த மற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்துடன் உலவச் சென்ற போது, திசை மாறி வேறு எங்கும் சென்றிருக்கலாம். அவை இடம் கண்டறிந்து மீண்டும் நம்மிடம் வந்து சேரும் என நம்பிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் முரட்டுச் சிங்கம் காணாமல் போன மான் குட்டி ஒன்றுடன் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததை மற்ற மான்கள் பார்த்தன. ஆனாலும், நீண்ட நாட்கள் ஆகியும் இவ்விரண்டும் தங்களுடைய இருப்பிடம் வந்து சேரவில்லை.

அதிர்ச்சியடைந்த மற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்தையும் குட்டி மானையும் தேட ஆரம்பித்தன. எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. குட்டி மானின் தாய், சேயை இழந்த ஏக்கத்தில் காட்டில் சுற்றித் திரிந்தது.

ஓர் அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற சப்தம் கேட்டது. உன்னிப்பாக அந்த திசை நோக்கி நடந்த தாய் மான் சேறும், சகதியுமாய் இருந்த படு குழியில் முதலை ஒன்றுடன் ஒரு சிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.

இது நம்முடன் இருந்த முரட்டுச் சிங்கம்தான் என அறிந்து, உரத்த குரலில் சப்தமிட்டது. இந்த சப்தம் கேட்டு, காட்டிலுள்ள மற்ற மான்களும், குரங்குகளும், சிங்கங்களும் அங்கு படையெடுத்தன.

முரட்டுச் சிங்கம் முதலையுடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மான்கள் எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டுமென சிங்கங்களிடம் கூறின. ஆனால், சிங்கங்கள் அது தங்களுக்கு இழைத்த கொடுமைக்கு சாகட்டும் என சொல்லி விட்டுச் சென்றுவிட்டன.

ஆனால், குரங்குகள் அந்தச் சிங்கங்கள் சொன்னதைக் கேட்காமல் அதன் மீது இரக்கம் காட்டி காப்பாற்ற ஒரு திட்டத்தைத் தீட்டி மான்களிடம் கூறின.

அத்திட்டத்தின்படி, வளர்ந்த மரங்களில் படர்ந்திருக்கும் கொடிகளை பிடுங்கி நாங்கள் கீழே போடுகிறோம். அதைக் கொண்டு நீங்கள் முரட்டுச் சிங்கத்தைக் காப்பாற்றி விடலாம் என யோசனைக் கூறின.

இதுவும் நல்ல யோசனைதான் என அறிந்த மான்கள், குரங்குகள் மரத்திலிருந்து பிடுங்கிப் போட்ட கொடி ஒன்றை எடுத்துச் சென்று சிங்கம் விழுந்திருந்த குழியில் போட்டு, "ஏய்.... சிங்கமே நீ இதை உன் வாயால் கவ்விப் பிடித்துக் கொள். நாங்கள் உன்னை மேலே தூக்கி காப்பாற்றி விடுகிறோம்" எனக் கூறின.

அவ்வாறே, முரட்டுச் சிங்கமும் கொடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டு ஏறி பாதி குழி வரும் போது, கொடி அறுந்து மீண்டும் குழிக்குள் விழுந்துவிட்டது.

இதை மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் ஏராளமான கொடிகளைப் பிடுங்கி ஒன்றாகக் கயிறு போல் திரித்து கீழே போட்டன. மான்கள் அதை சுருட்டிக் கொண்டு போய் மீண்டும் குழிக்குள் போட்டன. முரட்டுச் சிங்கம் அந்தப் பலமான கொடியைப் பிடித்துக் கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என கூறிக் கொண்டு மேலே வந்து சேர்ந்தது.

தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றி உயிர் பிச்சை வழங்கிய குரங்கு களுக்கும், மான்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறியது! நாம் நயவஞ்சமாகப் பழகி மான் இனத்தை வேட்டையாடிப் புசித்தும், தன்னைப் பழி வாங்காமல் காப்பாற்றிய செயல் கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.

தன் உயிர் உள்ளவரை தன் பலத்தை வைத்துக் கொண்டு எல்லா உயிர் களுக்கும் தன்னாலான உதவி செய்வேனே ஒழிய, தொந்தரவு செய்யமாட்டேன் எனவும், அன்றிலிருந்து தனக்கு ஏற்பட்ட துன்பம் ஒரு பாடம் எனக் கருதி மற்ற சிங்கங்களுடன் திருந்தி வாழவும் முடிவு செய்தது முரட்டுச் சிங்கம்.

seelanin thanthiram tamil story

சீலனின் தந்திரம்!

வைரபுரி என்ற நாட்டில் பல கோடிகளுக்கு அதிபனான சீலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தயாளகுணம் கொண்டவன். அந்நாட்டு மன்னன் பர்வதனனின் ஆருயிர் நண்பன். பொக்கிஷத்தில் பணக்குறைவு ஏற்பட்ட போதெல்லாம் மன்னனுக்குத் தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்து பிறகு வாங்கிக் கொள்வான் சீலன். அப்படி கிடைத்த வட்டிப் பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவி வந்தான் சீலன்.

ஓவியக் கலையில் கைதேர்ந்தவன் சீலன். மற்ற கலைகளிலும் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அழகான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், வேலைப்பாடுடன் கூடிய கைவினைப் பொருள்கள் என்றால் என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவான். ஆனால், அப்படி வாங்கும் பொருள்களை யார் கேட்டாலும் கொடுக்கவும் மாட்டான்.

மன்னன் பர்வதனுக்கு, சீலனின் இந்தப் பிடிவாதக் குணம் ஒன்றுதான் பிடிக்காமல் இருந்தது. அதனால் சீலனிடமிருந்த அழகிய பொருள்களில் ஒன்றைக் கூடப் பெறமுடியாமல் போனது.

ஒரு நாள் சீலனைக் காண வாலிபன் ஒருவன் வந்தான். கிழிந்த ஆடைகளை அணிந்து தாடி வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் அவன் உயர் குடியில் பிறந்தவன் என்று சீலனுக்கு தெரிந்துவிட்டது. அவன் அந்த இளைஞனை வரவேற்று உட்காரும் படி சொன்னான்.

“ஐயா! என்னை இந்தக் கோலத்தில் கண்டவர்கள் எல்லாரும் விரட்டினார்களே ஒழிய என்னை "உட்கார்' என்று இதுவரை யாரும் சொல்லியதில்லை. மிக்க நன்றி. நீங்கள் கலை அம்சம் கொண்ட பொருள்களை விலைக்கு வாங்கிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன்.

“என் பெயர் சக்தி. என் முன்னோர்கள் ஜமீன்தாரர்கள். எங்களுக்குச் சொந்தமான அபூர்வ ஓவியம் ஒன்றைத் தங்களுக்கு விற்க எடுத்து வந்துள்ளேன்,'' எனக் கூறித் தான் கொண்டு வந்த ஓவியத்தை அவனிடம் காட்டினான்.

அந்த ஓவியத்தைக் கண்டு சீலன் பிரமித்தான். ஒரு தாய் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவது போன்ற படம் அது. குழந்தை தன் பொக்கை வாயை விரித்து சிரிப்பது மிக அழகாக தீட்டப்பட்டிருந்தது. வண்ணங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதமாகத் தீட்டப்பட்டிருந்தன.

“இது கற்பனையில் தோன்றிய படமாக இல்லை. நேரில் நடப்பதை பார்த்து இதனை வரைந்திருக்கிறார் ஓவியர். என்ன நான் சொல்வது சரிதானே?'' என்று கேட்டான்.

“நீங்கள் நினைத்தது சரியே. அந்த ஓவியத்தில் உள்ள பெண்மணி என் தாய். அந்தக் குழந்தைநானே. இதனை வரைந்த ஓவியனுக்கு என் தந்தை நூறு ஏக்கர் நிலம் பரிசாக அளித்தார். ஆனால், இப்போதோ நான் அந்த ஓவியத்தை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்,'' என்றான்.

“இந்த ஓவியத்திற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கிறேன். நீயே இதன் விலையைச் சொல்,'' என்றான் சீலன்.

“எனக்கு இதற்காக நூறு பவுன்கள் கொடுத்தால் போதும். அதைக் கொண்டு நான் முன்னுக்கு வந்துவிடுவேன்,'' என்றான்.

“இவ்வளவு குறைவாகக் கேட்கிறாயே...'' என்று கேட்டார் சீலன். “அதற்கு மேல் நான் கேட்கமாட்டேன்!'' என்றான் சக்தி. நூறு பவுன்களைக் கொடுத்து அனுப்பினான் சீலன்.

அன்று மாலை சீலன் தான் வாங்கிய ஓவியத்தை மன்னனிடம் காட்டினான். “ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்குக் கொடுத்துவிடு,'' என்றான் மன்னன்.

“நான்தான் இந்த மாதிரி பொருள்களை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமே. நீங்கள் கேட்டும் பயனில்லை!'' என்று கூறிவிட்டான்.

சில வருடங்கள் சென்றன. ஒரு நாள் சீலன் மன்னனுடன் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்தான் சக்தி. அவனை அன்புடன் வரவேற்று மன்னனுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் சீலன்.

“நீ எப்படி இருக்கிறாய்?'' என்று விசாரித்தான் சீலன்.

“ஐயா! நீங்கள் கொடுத்த நூறு பவுன்களைக் கொண்டு வியாபாரம் செய்யத் தொடங்கி இப்போது உயர் நிலையில் இருக்கிறேன். உங்களிடம் ஒரு உதவியை நாடியே இப்போது வந்திருக்கிறேன்,'' என்றான்.

“என்ன வேண்டும்?''

“நான் அந்த ஓவியத்தைத் தங்களுக்கு விற்ற நாளிலிருந்து எனக்கு மன நிம்மதியே இல்லை. தயவு செய்து அதை நீங்கள் எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அதற்காக நீங்கள் என்ன கேட்டாலும் நான் கொடுக்கிறேன்,'' என்றான்.

சக்தியின் மனநிலை அவனுக்கு புரிந்தது. ஆனால், மன்னனோ தான் கேட்டும் அந்த ஓவியத்தைக் கொடுக்க முடியாது என்று கூறிய சீலன் என்ன செய்யப்போகிறான் என்று கூர்ந்து கவனிக்கலானான்.

“நான் ஒருமுறை ஒரு பொருளை வாங்கிவிட்டால் அதை யாருக்கும் கொடுக்கமாட்டேன். இது என் கொள்கை,'' என்றான்.

“என்தாயின் மீது வைத்துள்ள பாசத்தால்தான் அந்த ஓவியத்தைக் கொடுக்கும்படிக் கேட்கிறேன். எனக்காக உங்கள் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்துங்கள்,'' என்று வேண்டினான்.

அவனுக்கு எப்படி உதவலாம் என யோசித்த சீலன், “சக்தி நீ உன் தாயின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறாய் என்பது தெரிகிறது. அதனால் உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். நான் ஓவியக் கலையில் ஓரளவு பயிற்சி பெற்றவன் என்பது உனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்.

“அதனால் நீ கொடுத்த ஓவியம் போலவே நான் மற்றொரு ஓவியம் தீட்டுகிறேன். இதற்கு ஒருவார காலம் பிடிக்கும். இரண்டு ஓவியங்களில் எது முதலாவது வரையப்பட்டது என்று கண்டுபிடித்து உன் ஓவியத்தை எடுத்துச் செல். இந்தப் பரீட்சைக்கு நம் மன்னரே நடுவர்!'' என்றான். சக்தி அதற்குச் சம்மதித்தான்.

சீலன் ஒரு வார காலத்தில் சக்தி கொடுத்த ஓவியம் போல மற்றொரு ஓவியத்தை வரைந்துவிட்டான். இரு ஓவியங்களையும் அவன் குறித்த நாளன்று மன்னன் முன் கொண்டு போய் வைத்தான். அதேநாளில் அங்கு வந்தான் சக்தி.

அந்த இரு ஓவியங்களையும் பார்த்துவிட்டு தான் சீலனுக்கு விற்ற ஓவியம் எது என்பதைக் கண்டு பிடித்துக் காட்டினான்.

“சக்தி! நீ வென்று விட்டாய். அதுதான் நீ எனக்கு விற்ற ஓவியம். அதனை நீ எடுத்துக் கொண்டு போகலாம்,'' என்றான்.

மன்னனும் அந்த இரு ஓவியங்களையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, “இரண்டு ஓவியங்களும் ஒன்று போலத்தானே உள்ளன. எப்படி ஓவியத்தைக் கண்டுபிடித்தாய்?'' என்று கேட்டான்.

“அரசே! சீலன் மிகச் சிறந்த ஓவியர் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் எவ்வளவு கூர்ந்து கவனித்து ஓவியம் தீட்டி இருக்கிறார் என்பதற்கு இந்த ஓவியத்தில் என் தாயின் இடது காதின் ஓரமாக உள்ள சிறு மச்சத்தைக் கூட ஓவியத்தில் தீட்டி இருப்பதை எடுத்துக் காட்டலாம்.

“நான் விற்ற படத்தில் என் தாயாரின் மூக்குத்திக் கல் நீல நிறத்தில் உள்ளது. ஆனால், சீலன் தீட்டிய ஓவியத்தில் அது சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த சிறு வித்தியாசத்தைக் கொண்டு என் ஓவியம் எது என்று கண்டு கொண்டேன். ஆனால், இந்தச் சிறிய தவறை கைதேர்ந்த ஓவியரான சீலன் எப்படிச் செய்தார் என்றுதான் எனக்குப் புரியவில்லை,'' என்று கூறி அவர்களை வணங்கிவிட்டுத் தன் ஓவியத்தை எடுத்துக் கொண்டு சென்றான்.

“சீலா... நீ ஏன் தவறு செய்தாய் என்பது சக்திக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியும். தாய் மீது அன்பு கொண்டு சக்தி படத்தை கேட்டதும் உனக்கு அவன் மீது இரக்கம் வந்துவிட்டது. அதே சமயம் உடனே கொடுத்துவிட்டால், என்னுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் போட்டி வைப்பது போல் வைத்து, அதற்கு என்னையே நீதிபதியாக்கி வேண்டுமென்றே தவறு செய்வதுபோல் செய்து சக்தியிடம் படத்தை கொடுத்து விட்டாய். உன்னுடைய திறமையை பாராட்டுகிறேன்!'' என்றான்.

பிரச்னை தீர்ந்ததை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டான் சீலன்...

nandri marantha singam tamil story

நன்றி மறந்த சிங்கம்!

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு.... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்'' என்றது.

“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே.... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.

“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?' உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

“எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே....'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்....''

“எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

நீதி : ஒருவர் செய்த நன்றியை மறப்பது மிகப் பெரிய பாவம். அப்படி செய்பவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டார்.

Saturday, August 27, 2016

ethanukku ethan tamil story

எத்தனுக்கு எத்தன்!

பொன்னியூர் என்ற ஊரில் ஜனா, சுருதி என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். ஜனா திறமையாகச் சம்பாதித்துக் கொண்டு வருவான். சுருதி அதை வாங்கி நிம்மதியாகச் சாப்பிடுவான்.

உள்ளூரில் பஞ்சம் ஏற்பட்டது. கட்டுபடியாகவில்லை. ஆதலால் வெளியூர் சென்று வியாபாரம் செய்து பிழைக்க இருவரும் முடிவு செய்தனர்.

இருவரும் குதிரையில் ஏறிக் கொண்டு பல ஊர்களையும் கடந்து ஏமலூர் என்ற ஊரை அடைந்தனர். ஊர் எல்லையில் உள்ள சத்திரம் ஒன்றில் தங்கினர். ஜனா சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டான்.

“சுருதி நான் இங்கே ஓய்வெடுக்கிறேன். நீ ஊருக்குள் சென்று வியாபாரம் செய்து விட்டு வா!'' என்று கூறி நண்பனை அனுப்பி வைத்தான்.

சுருதி மிகவும் வெகுளி. யார் எதைச் சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவான். இக்கட்டில் மாட்டிக் கொண்டு விழிப்பான். இருந்தாலும் அவனிடம்தான் காசு இருந்தது.

ஆயிரம் பொற்காசுகளை குதிரையின் சேணத்தில் மறைத்துக் கொண்டு குதிரையில் ஏறி நகரை நோக்கிச் சென்றான்.

ஊருக்குள் சென்றதும் வீதியில் எதிரே ஒருவன் வந்தான்.

“இந்தக் குதிரை விலைக்குக் கிடைக்குமா?'' என்று கேட்டான்.

“விலைக்குத் தரத் தயார். விலை மிக அதிகம். உன்னால் கொடுக்க முடியுமா? நீ என்ன தொழில் செய்கிறாய்?'' என்று வினவினான் சுருதி.

“என் பெயர் வில்லன். ஆடுகளை வெட்டி இறைச்சி விற்கும் கசாப்புக்கடை நடத்துகிறேன். விலையைக் கூறு?'' என்றான் வில்லன்.

“இதன் விலை ஐந்நூறு பொற்காசுகள்!''

“உயர்தரமான அரேபியக் குதிரைகளே இருநூறு பொற்காசுகளுக்குக் கிடைக்கின்றன. உன் குதிரை பெரிய அதிசயக் குதிரையா? சரி பரவாயில்லை. இதோ நீ கேட்ட ஐந்நூறு பொற்காசுகள். குதிரையைக் கொடு'' என்றான். ஐந்நூறு பொற்காசுகளை எண்ணியும் கொடுத்தான்.

பொற்காசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுருதி குதிரையை விட்டு இறங்கினான். பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டான். பிறகு குதிரையின் சேணத்தில் தான் வைத்திருந்த பணப்பையை எடுக்கச் சென்றான்.

“இந்தக் குதிரையைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். இப்போது குதிரை எனக்குச் சொந்தம். குதிரையோடு உள்ள பொருட்கள் யாவும் எனக்கே சொந்தம்'' என்று கூறிவிட்டு குதிரைமேல் ஏறிச் சென்றுவிட்டான்.

ஆயிரம் பொற்காசுகளை இழந்த சுருதி மிகுந்த ஏமாற்றத்துடன் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தான். நடந்தவற்றை நண்பனிடம் கூறினான். அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுடைய சோகக் கதையைக் கேட்ட ஜனா ஏளனமாகச் சிரித்தான்.

“இந்த ஊரினர் பயங்கர எத்தர்களாக இருப்பர் போலும். இருக்கட்டும். உன்னிடம் குதிரையை வாங்கியவனின் பெயர் என்ன?'' என்று கேட்டான் ஜனா.

“கசாப்புக்கடை வில்லன்!'' என்றான்.

உடனே நண்பனிடம் இருபத்தி ஐந்து பொற்காசுகளை வாங்கிக் கொண்டு வில்லனின் கசாப்புக் கடையின் முன்பாகப் போய் நின்றான். கடையில் நான்கைந்து ஆட்டுத் தலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைத் திண்டில் வில்லனின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

“ஒரு தலையின் விலை என்ன?'' என்று கேட்டான்.

“ஒரு தலை ஒரு பொற்காசு.''

“எத்தனை தலைகள் வேண்டுமானாலும் கிடைக்குமா?''

“ஆகா.... தாராளமாகக் கிடைக்கும்!''

“இதோ இருபத்தி ஐந்து பொற்காசுகள். இருபத்தி ஐந்து தலைகள் கொடு!''

“இப்போது இங்கே இருக்கும் தலைகளை எடுத்துப் போ. மீதியை நீ இருக்குமிடத்தைச் சொல். அங்கே அனுப்பி வைக்கிறேன்.''

“அதெல்லாம் முடியாது. இங்கு தொங்கும் தலைகளுடன் கடையில் உள்ள உன் குழந்தைகளின் தலையையும் வெட்டிக் கொடுக்க வேண்டும். தலைகள் என்றுதான் பேசினோம். ஆட்டுத்தலைகள் என்று கூறவே இல்லை. எனக்குக் குழந்தைகளின் தலைகளையும் கொடுக்க வேண்டும்!'' என்றான்.

கசாப்புக்கடைக்காரன் அதிர்ச்சியில் நடுங்கினான். "இவன் நம்மைவிடக் கில்லாடியாக இருக்கிறானே! எக்கச்சக்கமாக வாக்குக் கொடுத்து வசமாக மாட்டிக் கொண்டோமே!' என்று மிகவும் பதறிப் போனான்.

“ஐயா! ஏதோ முட்டாள்தனமாக வாக்குக் கொடுத்து விட்டேன். மன்னித்துக் கொள்!'' என்று கெஞ்சினான்.

“சேச்சே.... நீ கூறுவது எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலில் தலைகளைக் கொண்டு வா!'' என்று கடுமையாகக் கூறினான் ஜனா.

அப்போதுதான் தான் காலையில் குதிரையை ஏமாற்றி வாங்கியது நினைவிற்கு வந்தது. ஏமாந்தவனின் நண்பன் இவன் என்பதை புரிந்து கொண்டான். இவனிடம் தனது ஜம்பம் பலிக்காது என்பதைப் புரிந்து கொண்டான்.

“ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். வெளியூர்க்காரர் தானே என்று நினைத்து குதிரைக்காரரான உமது நண்பரை ஏமாற்றிவிட்டேன். குதிரையையும் சேணத்தில் இருந்த ஆயிரம் பொற்காசுகளையும் தந்து விடுகிறேன். என்னை இத்துடன் விட்டு விடுங்கள்'' என்று மன்றாடினான்.

சரியெனச் சம்மதித்து குதிரை மற்றும் பணப்பையுடன் ஜனா சத்திரத்திற்குத் திரும்பினான். நண்பனின் ஆற்றலை எண்ணி வியந்தான், தானும் ஜனாவைப் போல் புத்திச்சாலியாக மாற தீர்மானித்தான் சுருதி.

Friday, August 26, 2016

kurangu vaangi kodutha thandanai tamilstory

குரங்கு வாங்கி கொடுத்த தண்டனை

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுத்து எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் கொடுத்தார்கள்.

"குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்" என்றனர் சீடர்கள்.

பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.
அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு....

அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.

பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.

"குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!" என்றான் மண்டு.

பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.

"இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தான் மட்டி.

மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

"வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!" என்று புறப்பட்டார், பரமார்த்தர்.

தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.

அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.

"குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!" என்று புலம்பினார்கள் சீடர்கள்.

ottrumaiye balam tamil story

ஒற்றுமையே பலம்

ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை வைத்தார்.

நால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். தன மூத்த மகனை அழைத்து நான்கு கொம்பிகளையும் ஒன்றாக கட்ட சொன்னார்.

பிறகு ஒவோருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடியவில்லை.

பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.

ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பெரும் நான்கு கொம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாருளும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.

நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள்.

uyir kaakum thanthiram tamilstory

உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

aanthai kudumbam tamil story

ஆந்தை குடும்பம்!

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.

ஒரு நாள், ""அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?'' என்றது.

""நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அத னால் தான் நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,'' என்றது தாய் ஆந்தை.


""ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?'' என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.

""கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றது தாய் ஆந்தை.

""அப்படி என்ன தவறு செய்தார்?'' என்று கேட்டன குஞ்சுகள்.

""ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.

""குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.

""இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.

""பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு துõங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.

""அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

""அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

""நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,'' என்றது தாய் ஆந்தை.

""அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,'' என்றனர்.

செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.

nalliyum pulliyum tamil story

நள்ளியும் புள்ளியும்!

பேரன் சந்தர் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பேத்தி புவனாவைப் பார்த்துப் பார்வதிப் பாட்டி சிரித்துக் கொண்டே அன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது. குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.

நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.

தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும். நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..

இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.

ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.

பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..

நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.

நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.

மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..

எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.

நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.

கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத் தூங்க வைத்தது.

buthisaali kaluthai tamil story

தந்திர நரியை வென்ற புத்திசாலி கழுதை

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.

"நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய்.

""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து,

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.

கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

yaar muttal tamil story

யார் முட்டாள்?

ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து விடுவர்.
அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, ""இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா?'' என்று கேட்பர்.
ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.
""இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்,'' என்று சொன்ன வீட்டுக்காரன்... அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.
சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, ""நன்றாகப் பார்... ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது தேவையோ எடுத்துக் கொள்,'' என்றான்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான்.
""ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!'' என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டான்.
""இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? சின்னக்காசை எடுத்துவிட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?'' என்று சொன்னான் வீட்டுக்காரன்.
நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, ""இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்,'' என்றார் அவர்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாக எடுத்தான்.
""இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது,'' என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.
""ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே... இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்,'' என்று அறிவுரை சொன்னார் நண்பர்.
""ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது.
""நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்,'' என்றான் முட்டாள்.
இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்து போய்விட்டார்.

ottrumaiyin balan tamil story

ஒற்றுமையின் பலம்!

சில புறாக்கள் இரை தேடி பறந்து திரிந்தன. இறுதியில் ஓர் இடத்தில் அரிசி
மணிகள் சிதரிக்கிடப்பதைக் கண்டன.

ஆர்வதுடனே அங்கே இறங்கி அமர்ந்தன. அரிசியை பொறுக்கி திண்ண தொடங்கின.
திடீரென ஒரு வலை அவைகளின் மீது விழுந்தது.அதில் அவை சிக்கிக் கொண்டன வலையை வைத்திருந்த வேடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவை பயந்து மனம் கலங்கின.

அவைகளின் தலைவனுக்கு ஒரு தைரியம் உண்டாயிற்று. பயபடாதீர்கள் . வலையை அப்படியே கவ்விப்பிடித்து ஒற்றுமையாய் பறந்து செல்வோம் என்று உத்தரவு போட்டது. அதன் படியே புறாக்கள் வலையை அலகால் பிடித்துகொண்டு ஒற்றுமையாய் பறந்து சென்றன.வேடன் பின் தொடர்ந்து ஓடிப் பாத்தான்.முடியவில்லை.

ஒரு எலியின் வளை அருகே அவை தரை இறங்கின . எலி வெளியே வந்து தன் கூறிய பற்களால் வலையை கடித்து புறாக்களை விடுவித்தது. அவை எலிக்கு நன்றி சொல்லிவிட்டு உற்சாகமாக மீண்டும் பறந்து சென்றன.

vaira mothiram tamil story

வைர மோதிரம்

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள்.
அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

அந்த சமயம் பூபாலன் என்ற வழிப்போக்கர் அந்த ஊர் வழியாக வந்தார். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை
கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்தார். கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்றார்கள்.

சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்கப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. தன்னுடைய தீய குணத்தால் தனக்கே தீங்கு உண்டானதை எண்ணி வருந்தினார். மரியாதை ராமனிடம் உண்மையை ஒத்துக் கொண்டு திரண்டிருந்த ஊர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தன் தவறுக்குப் பரிகாரமாக கிடைத்த பணத்தில் பாதியை பூபாலனுக்கு பரிசாகக் கொடுத்து மீதியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்தார்.

பூபாலனும் சன்மானம் கிடைத்த மகிழ்வுடன் ஊருக்குச் சென்றார்.

மக்கள் மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

naangu thirudargal tamil story

நான்கு திருடர்கள்!

நான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், "நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து போய் கேட்டால் மட்டுமே தோண்டியைக் கொடுக்கச் சொல்லி அவளிடம் சொல்லுவோம்" என்றான்.

மற்ற மூவரும் நாலாமவன் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். நால்வரும் பாட்டியிடம் போனார்கள். "பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடுபட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு இந்த ஊரை விட்டு நாங்கள் சென்று விடுவோம். அதுவரை இந்தக் குடத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து நாங்கள் போகும் போது கொடுக்கவும். ஆனால் ஒரு நிபந்தனை. நாங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் நீ இந்தத் தோண்டியைத் தர வேண்டும். தனியாக யார் வந்து கேட்டாலும் நீ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதில் உள்ள பொருள் அனைத்தும் எங்கள் நால்வருக்கும் சொந்தம்" என்றார்கள்.

பாட்டியும் தோண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் சொன்னவாரே நால்வரும் வந்து கேட்கும் போது தோண்டியைத் தருவதாகக் கூறினாள்.

சில நாட்கள் சென்றன.

ஒரு நாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி மோர் பானையுடன் வந்தாள். அவளைப் பார்த்ததும் திருடர்களில் ஒருவன், "அண்ணே தாகமாக இருக்கிறது. மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டான்.

மற்றவர்கள் சரி என்று கூறவே மோர்க்காரியைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குவளை வாங்கிச் சாப்பிட்டனர்.

"அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. இந்த அம்மாளிடம் இருக்கும் மொத்த மோரையும் வாங்கி வைத்துக் கொண்டால் தாகம் எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்" என்றான் ஒருவன்.

"அது சரி, மொத்த மோரையும் வாங்குவதற்கு நம்மிடம் பானை எதுவும் இல்லையே!" என்றான் ஒரு திருடன்.

"ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வரச் சொல்லுவோம்" என்று சொல்லிய மற்றொரு திருடன் தன் பக்கதில் இருந்த திருடனிடம், "நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா" என்றான்.

அந்த நொடியில் பாட்டி வீட்டிற்குச் சென்ற திருடனின் மனதில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. பாட்டியிடம், "பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோமே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன்னார்கள்" என்றான்.

"உன்னிடம் எப்படித் தர முடியும்? நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே!" என்றாள் பாட்டி.

"என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்." என்றான் அந்தத் திருடன்.

பாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள்.

திருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து, "பாட்டி தரமாட்டேனென்கிறாள்" என்று உரக்கக் கத்தினான்.

மரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் "அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி" என்றார்கள்.

பாட்டி "தோண்டியா?" என்று கேட்டாள்.

"ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுட்தனுப்பு" என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும் படியாகக் கத்தினார்கள்.

பாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து ஏமாற்றுக்காரத் திருடனிடம் கொடுத்தாள்.

தோண்டியை வாங்கிக்கொண்ட ஏமாற்றுக்காரத் திருடன் வேறு வழியாக ஓடியே போய் விட்டான்.

வெகுநேரமாகியும் அனுப்பிய ஆள் வராததால் சந்தேகமடைந்த மற்ற மூவரும் பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். "எங்கே அவன்"? என்று பாட்டியிடம் கேட்டார்கள்.

"அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே!" என்றாள் பாட்டி.

"எந்தத் தோண்டி?" என்றான் மூவரில் ஒருவன்.

"ஏன்? நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்" என்றாள் பாட்டி.

இதைக் கேட்டதும் திருடர்கள் மூவரும் பாட்டியை கோபத்துடன் "அதெப்படி நீ அவனிடம் தோண்டியைக் கொடுக்கலாம்? நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே நீ கொடுக்க வேண்டும். இப்படி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே! அதனால் இந்த நஷ்டத்தை நீதான் ஈடு செய்ய வேண்டும்" என்று கூச்சல் போட்டனர்.

பாட்டி அதற்கு மறுக்கவே அவளை நீதிபதியிடம் அழைத்துச் சென்று முறையிட்டனர்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, "பாட்டி செய்தது தான் தவறு. ஒப்புக்கொண்டதற்க்கு மாறாக ஒருவனிடம் தோண்டியைக் கொடுத்ததால், அவள் தான் அதற்கு பொறுப்பேற்க்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

வழிநெடுக புலம்பிய படியே நடக்க வழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனான மரியாதை ராமன் அழுது கொண்டே வரும் பாட்டியிடம் நடந்ததைக் கேட்டறிந்தான். நடந்தவை முழுவதையும் கேட்டறிந்த மரியாதை ராமன் "இது என்ன அநியாயமான தீர்ப்பு, இது சரியல்ல" என்று தனது கருத்தை தெரிவித்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்க சேவகர்கள் மன்னரிடம் அப்படியே இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டனர்.

அரசன் மரியாதை ராமனை அழைத்து "தமது அரசவையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பையே நீ விமர்சனம் செய்தாயாமே! சரி நீ தீர்ப்பு சொல்லியிருந்தால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லியிருப்பாய்?" என்று கேட்டார்.

"அரசே, நான்கு பேரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே பாட்டி அந்தத் தோண்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மூன்று பேர் தானே வந்து தோண்டியைக் கேட்கிறார்கள். இவர்கள் மூவரும் போய் நாலாவது ஆசாமியையும் தம்முடன் கூட்டிக் கொண்டு வரட்டும். அப்பொழுது பாட்டி நிச்சயம் அவர்கள் கொடுத்த தோண்டியைத் திரும்பக் கொடுத்து விடுவாள்" என்றான்.

சிறுவன் மரியாதைராமன் அளித்த தீர்ப்பைக் கேட்டு மன்னர் மிகவும் வியந்து போனார்.

ராமனை அப்பொழுதே அரசவை நீதிபதியாக நியமித்தார்.

nalmuthukkal tamil story

நல்முத்துக்கள்!

கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார்.

ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வந்த உடன் வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார்.

கந்தன் சில நாள் கழித்து ஊருக்கு திரும்பி வந்து கேசவனிடம் தான் கொடுத்து வைத்திருந்த நல்முத்துக்களைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

ஆனால் கேசவனோ "நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கணவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?" என்று கேட்டுவிட்டான்.

தன் நண்பன் இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பாராத கந்தன் மிகவும் மனம் வருந்திப்போனான். இனி இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்தவன் நேராக மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

வழக்கை பொறுமையாகக் கேட்டறிந்த மரியாதை ராமன் அந்த வழக்கில் இருந்த சில கஷ்டங்களை எடுத்துச் சொன்னார்.

"அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்? நீங்கள் விலையுயர்ந்த முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்த போது பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கேசவனிடமிருந்து எப்படி விலை உயர்ந்த முத்துக்களை வாங்க முடியும்? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம்" என்று கூறி கந்தனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதை ராமன்.

மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச்சொன்னான் மரியாதை ராமன்.

கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன.

"என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுணரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்" என்றான் மரியாதை ராமன்.

கேசவன் மரியாதை ராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப் புறம் சென்றான்.

திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுது தான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பெட்டிக்கு மேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும் போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான்.

உடனே கேழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். அதில் 98 முத்துக்களே இருந்ததைப் பார்த்து ஒரு கனம் அதிர்ந்தான் கேசவன். 'அய்யோ! நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்' என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவேயில்லை.

கேசவனுக்கோ பயம் வந்து விட்டது. 'இப்போது நாம் 98 முத்துக்களை மட்டும் அவசரமாக கோர்த்து எடுத்துப் போய்க் கொடுத்தால் 2 முத்துக்களை நாம் திருடிக் கொண்டோமென்று நீதிபதி கடுமையான தண்டனை விதிப்பாரே! இந்தத் தண்டனையில் இருந்து தப்புவது எப்படி?' என்று நினைத்த கேசவனுக்கு கந்தனிடம் மோசடி செய்த 2 முத்துக்களின் நினைவு வந்தது.

உடனே அந்த இரண்டு முத்துக்களையும் எடுத்துச் சரத்தில் கோர்த்து 100 முத்துக்கள் கொண்ட மாலையாக ஆக்கி விட்டான் கேசவன்.

மறுநாள் கேசவன் முத்துமாலையைக் கொண்டு போய் மரியாதை ராமனிடம் கொடுத்ததும் முதல் வேலையாக மரியாதைராமன் முத்துக்களை எண்ணத் துவங்கினான்.

கேசவனோ நல்லவேளையாக 2 முத்துக்கள் நம்மிடமிருந்தது. இல்லையேல் இப்போது தண்டனை கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

முத்துக்களை எண்ணி முடித்த மரியாதை ராமன் காவலர்களைப் பார்த்து " இவனைக் கைது செய்யுங்கள்" என்றான்.

காவலர்கள் மரியாதை ராமனின் ஆணைப்படி கேசவைக் கைது செய்தார்கள்.

கேசவனோ 'நான் என்ன தவறு செய்தேன், ஏன் என்னைக் கைது செய்கிறீர்கள்' என்றான்.

"நான் உன்னிடம் கொடுத்தது 98 முத்துக்கள் தான். அப்படியிருக்க இந்த மாலையில் மேற்கொண்டு 2 முத்துக்கள் எப்படி வந்தன என்ற விவரத்தை நீ சொலாவிட்டால் உனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்" என்றான் மரியாதை ராமன்.

தண்டனைக்குப் பயந்த கேசவன் கந்தனிடம் மோசடி செய்து 2 முத்துக்களை அபகரித்து வைத்திருந்ததை சொல்லிவிட்டான்.

அவன் வாயாலேயே உண்மையைத் வரவழைத்த மரியாதைராமன் கந்தனுக்கு அவனது 2 முத்துக்களைக் கொடுத்து விட்டு, கேசவனுக்கு ஏமாற்றிய குற்றத்திற்காக தண்டனையும் கொடுத்தான்.

மரியாதைராமனின் சமயோஜிதமான யோசனையால் உண்மை வெளிவந்ததை எண்ணி மக்கள் ராமனை மிகவும் பாராட்டினார்கள்.

nei valakku tamil story

நெய் வழக்கு!

ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள் பெயர் துர்கா.

யசோதையிடம் நிறையப் பசுக்கள் இருந்தன. துர்காவிடம் மிகக்குறைந்த அளவே பசுக்கள் இருந்தன. இருவரும் பால், மோர், தயிர், நெய் விற்பவர்களே. யசோதை ஊதாரித்தனமாகச் செலவுகள் செய்பவள்.

ஆனால் துர்காவோ சிக்கனமானவள். ஒரு நாள் யசோதை வீட்டிற்கு விருந்தினர் ஏராளமாக வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்வதற்குப் போதுமான அளவு நெய் அவளிடம் இல்லை. ஆகையால் எதிர் வீட்டுக்காரி துர்காவிடம் சென்று ஒருபடி நெய் கடனாகப் பெற்றுக் கொண்டாள். வெகு நாட்களாகியும் யசோதை துர்காவிடம் நெய்யைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆகையால் ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டிற்குச் சென்று நெய்யைக் கொடுக்குமாறு கேட்டாள். அதற்கு யசோதை உன்னிடம் எப்போது நான் நெய் வாங்கினேன்? என்று கேட்டு விட்டாள். இதைச் சற்றும் எதிர் பாராத துர்க்கா அதிர்ச்சியுற்றாள். அவள் நெய் போனாலும் பரவாயில்லை இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டென் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டாள். வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போட வேண்டும் என்பதற்க்காக ஒரி காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செய்தார் அவர். பின் இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு அருகில் வைக்கச் செய்தார்.

முதலில் யசோதையையும் இரண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமாக நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவினால். சேறு சரியாகப் போகவில்லை. சேறு அப்படியே இருந்தது.

அடுத்து துர்கா சேற்றில் இறங்கி நடந்தாள். பின் கிளிஞ்சலால் காலிலுள்ள சேற்றைச்
சுத்தப்படுத்திய பின் செம்பிலுள்ள தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு
வந்தாள். செம்பிலும் சிறிது தண்ணீர் மிச்சமாக இருந்தது.

அடுத்து மரியாதைராமன், யசோதையை அழைத்து அவள் கருத்தைக் கேட்டார். நான் நிறையப் பசுக்கள் வைத்திருக்கிறேன். எனக்கு அவற்றால் போதுமான அளவு நெய் கிடைக்கிறது. ஆனால் துர்காவிடம் மிகக் குறைந்த அளவே பசுக்கள் இருக்கின்றன. அப்படியிருக்க நான் அவளிடம் நெய் கடனாக வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னை அவமானப் படுத்த வேண்டுமென்பதற்காக என்மேல் இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளாள் என்றாள் யசோதை.

இதைப் பொறுமையாகக் கேட்ட மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்லத் துவங்கினான்.

துர்கா காலிலுள்ள சேற்றை கிளிஞ்சல்களால் வழித்து எடுத்து விட்டு தண்ணீரால் கால்களைச்
சுத்தமாகக் கழுவிய பின் சிறிது தண்ணீரும் செம்பில் மிச்சம் இருக்கிறது. ஆகையால் அவள்
சிக்கனக்காரி. நீயோ காலிலுள்ள சேறு போகாமல் அவ்வளவு தண்ணீரையும் செலவழித்துவிட்டாய். இதிலிருந்தே நீ ஊதாரி எனத் தெரிகிறது. ஆகையால் நீ துர்காவிடம் நெய் கடனாக வாங்கி இருக்கிறாய் என்பது உறுதியாகிறது என்றார் மரியாதைராமன்.

யசோதையும், துர்காவிடம் நெய் கடனாக வாங்கிக் கொண்டதை ஒத்துக் கொண்டாள். பின் கடனாக வாங்கிய நெய்யை துர்காவிடம் கொடுக்க யசோதைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை அனைவரும் பாராட்டினர்.

nermaiyana pitchaikaarar tamil story

நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான்.

நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.

இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “”நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,” என்றான்.

உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.

இதைக் கண்ட மன்னன், “”ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது’ என்று நினைத்தான்.

உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.

அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.

தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.

மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், “”இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.

இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,” என்று கூறினான்.

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.

கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.

Thursday, August 25, 2016

buthisaali ranuvaveerar tamilstory

புத்திசாலி ராணுவவீரர்!

அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுற்றாண்டு.

அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.

அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.

“இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார்.

இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.

“அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார்.

“நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.

“ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!”

“ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி.

“சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.

“இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன்.
இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.

“இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம்.

“சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி.

பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார்.

நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.

“இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

“இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’

இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது.
இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…?

நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது.

அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை.
ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

“கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது.

பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.

“இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார்.

ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார்.
புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

kokkuku ethanai kaal tamilstory

கொக்குவுக்கு எத்தனை கால்

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

“ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.

buthi balam tamil story

புத்தி பலம்!

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

“தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

“எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.

“என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.

“உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

“நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.

“இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

“சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

bandha paranthaman tamil story

பந்தா பரந்தாமன்!!

வில்லாளப்பட்டி என்ற ஊரில் பந்தா பரந்தாமன் என்ற புகழ் மிக்கப் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர். அவரை யாரும் விவாதத்தில் தோற்கடிக்க முடியாது. எந்தவிதமான விஷயங்களானாலும் அவருக்கு அத்துப்படி, எனவே, இயல்பாகவே அவருக்குச் சற்று மண்டைக் கர்வம் ஏறி இருந்தது. நாட்டில் கல்வி அறிவு நிரம்பப் பெற்றவன். பெரிய அறிவாளி வாதங்களில் சிறந்தவன் என்று யாரும் அவர் இருக்கும் போது தலை காட்டிவிட முடியாது. அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு அரசாங்க அதிகாரி வந்தான். அவன் பெயர் வினோத். ல்லாவிதக் கலைகளிலும் அவனுக்குச் சிறிது பயிற்சி இருந்து வந்தது. அரசனின் உதவியால் படித்து முன்னேறியவன். இருப்பினும் அதை வெளிக் காட்டி கொள்ளமாட்டான். அமைதியாகவே தன் பணியினை செய்து வந்தான்.

வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து எப்போதும் மக்களின் கவனத்தைத் தன் பக்கம் வைத்துக் கொள்வதில் பந்தா பரந்தாமன் கில்லாடி. சாமர்த்தியக்காரராக விளங்கினார். மக்களில் பலர் அவரை இதன் காரணமாக வெறுத்தனர். என்றாலும் இந்த வெறுப்பை வெளிப்படையாகக் காட்டி கொள்ளவில்லை. அன்று மஹாபாரதம் பற்றிய காலட்சேபம் நடந்தது. பண்டிதரின் நாவன்மையை ரசித்த வாறு வந்து கொண்டிருந்தான் வினோத். திடீரென்று, “யோவ் பிரசங்கியாரே! நிறுத்தும்’ என்று குரல் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். பட்டு பீதாம்பரம் உடுத்தி ஜகஜ்ஜோதியாய் நின்றான் பந்தா பரந்தாமன்.

“”என்ன? என்ன விஷயம்?” என்று பதறினார் பாகவதர். என்னையா கதை அளக்கிறீர் நீர்! பீஷ்மரை அர்ஜுனன் கொல்லவில்லை! சிகண்டி தான் அம்பு எய்து கொன்றவனே தவிர அர்ஜுனன் வெறும் கருவிதான். அர்ஜுனனால் அவர் கொல்லப்பட முடியாது. முற்பிறவியில் பெண்ணாக இருந்து பீஷ்மரால் வஞ்சிக்கப்பட்டவனே சிகண்டி என்ற அலியாகப் பிறந்து கோட்டை வாயிலில் இருந்த மாலையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அர்ஜுனன் தேரில் ஏறி அம்புகளால் பீஷ்மரை துளைத்தான். சிகண்டியை முன் நிறுத்தி அர்ஜுனன் பீஷ்மரைக் கொன்றான் என்பது எல்லாம் மாயாவாதம்! சொல்வதை ஒழுங்காகச் சொல்!” என்று கம்பீரமாகக் கூறிவிட்டு பாகவதரை ஓரம் கட்டிவிட்டு அவரே சொல்ல ஆரம்பித்தார். இப்படி அநேகரை அவமானப்படுத்துவது பந்தா பரந்தாமன் ஸ்டைல்.

ஒரு சமயம் அறிஞர்கள் பலர் கூடி இருக் கும் சபையில் பல்வேறு விதமான சமஸ்கிருத ஸ்லோகங்களை கூறி தன் மனதில் தோன்றியவாறு அதற்கு விளக்கமும் சொன்னார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களோ, அது வேதத்தின் ஓர் அங்கமா? அல்லது அவர் இயற்றியதா என்று கூடத் தெரியாது. தெரிந்த ஒரு சிலரும் அவருடைய தர்க்கவாதத்திற்கு அஞ்சி சும்மா இருந்தனர். வினோத்துக்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். அவனும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தான்.

“”உங்களில் யாருக்கேனும் எதுவாவது சந்தேகம் உண்டா? இருந்தால் கேளுங்கள்,” என்றார். அனைவரும் மவுனமாக இருந்தனர். வினோத் எழுந்தான். “”ஐயா, நீர் சொல்வது அனைத்தும் தவறு என்று எனக்குத் தெரியும். உமக்கு அது புரியும். சமஸ்கிருதம் நன்றாகத் தெரிந்தவர்களுக்கும் நான் சொல்வது விளங்கும்! ஆகவே, மேற்கொண்டு உரையாற்றாமல் இருப்பதே விசேஷம்!” என்று கூறினார்.

இதைக் கேட்ட பந்தா பரந்தாமனின் மூக்கு சிவந்தது. கண்களில் கனல் பறந்தன. “”யார் நீ, சின்னப் பயலே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா? என்னுடைய கருத்துக்களைத் தவறு என்கிறாய்! எனக்குள்ள செல்வாக்கு உனக்கு தெரியாது என்று கருதுகின்றேன்! எனக்கு அரசே நெருங்கிய நண்பர்,” என்றார்.

“”ஐயா, இவ்வூர் மக்களை நீர் பயமுறுத்திக் கொண்டு வாழ்வதைப் போல என்னிடம் பயமுறுத்த நினைக்காதீர். நீர் சொல்வது தவறு என்றேன். அதற்கு ஏன் உம் செல்வாக்கைக் காட்டி என்னைப் பயமுறுத்த நினைக்கிறீர்.

“”உமக்கு அரசர் நண்பராக இருக்கலாம். அதே அரசரால் உம் அநியாயங்களைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட ஓர் உயர் அதிகாரி நான். வேண்டுமானால் என்னைப் பற்றி அரசரிடம் நீர் புகார் கூறும், நானும் கூறுகிறேன்! யாருடைய பேச்சு எடுபடுகிறது என்று பார்க்கலாம்,” என்று கூறினான் வினோத். இதைக் கேட்டதும் வாதத்தில் வல்லவரான பந்தா பரந்தாமனுக்கு வேர்த்துக் கொட்டியது. பேச்சிழந்து நின்றார்.

“”உம்முடைய தவறுகளை நான் விளக்குவேன். எனக்கு நிறைய அலுவல்கள் இருப்பதால் இப்போதைக்கு முடியாது. அதுவும் தவிர இவ்வளவு பெரிய சபையில் மேலும் உம்மை அவமானப்படுத்த விரும்பவில்லை. “”எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பெயரில் எல்லாரையும் அவமானப்படுத்துவதை இன்றோடு விட்டு விடுங்க. மனிதர்களை மனிதர்களாக பாருங்க. அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க,” என்றான் வினோத், தலை குனிந்தான் பரந்தாமன்.

nermaiyai iru tamil story

நேர்மையாய் இரு!

செந்தில் ஒரு வேலையில்லாத பட்டதாரி. எத்தனையோ நிறுவனங்களில் அவன் நேர்முக தேர்வுக்கு சென்று வந்திருக்கிறான். இதுவரை அவன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறவில்லை. அவனை ஒத்த நண்பர்கள் அனைவரும் ஒரு வேலையில் சேர்ந்து விட்டிருந்தனர். அவர்களை எல்லாம் விட செந்தில் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இருந்தாலும் அவனுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் செந்திலுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தவுடன் செந்திலின் அப்பா சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பார். எந்த நிறுவனத்திலிருந்து தேர்வுக்கான அழைப்பு வந்திருக்கிறதோ, அந்த நிறுவனத்தில் தனக்குத் தெரிந்த யாராவது வேலை செய்கிறார்களா என்று யோசிப்பார். அப்படி யாரேனும் இருந்தால் பையனை அழைத்துக் கொண்டு போய் அவர்களிடம் அறிமுகம் செய்வார்.

தனக்கு தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லையென்றால் தன் நண்பர்களிடம் சென்று விசாரிப்பார். அவர்களுக்கு தெரிந்தவர்கள், அவர்களுடைய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று கேட்டு தெரிந்து கொள்வார்.

அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சென்று பார்த்து தன் மகனுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். அதனுடன் விட்டுவிடாமல் நேர்முக தேர்வு நடக்கும் போது, “”குறிப்பிட்ட நபரை தனக்கு தெரியும்,” என்று சொல்லுமாறு மகனிடம் கூறி அனுப்புவார்.

செந்திலுக்கு இதிலெல்லாம் இஷ்டமில்லை. இருந்தாலும் அப்பா சொல்வதை அவனால் தட்ட முடியவில்லை.

அடுத்த சில நாட்களில் சென்னையிலிருந்த ஒரு நிறுவனத்திலிருந்து செந்திலுக்கு கடிதம் வந்தது. நேர்முக தேர்வுக்கான கடிதம் அது. வழக்கம் போல செந்திலின் அப்பா சிபாரிசுக்காக ஆள் தேட ஆரம்பித்துவிட்டார். செந்திலையும் கூட்டிக் கொண்டு அலைந்து திரிந்தார். கடைசியில் அவருடைய நண்பருக்கு தெரிந்த ஒருவர் சென்னையில் இருப்பதாகவும், அவர் மனது வைத்தால் செந்திலுக்கு வேலை கிடைக்கும் என்று தெரியவந்தது.

சென்னை சென்று வர நிறைய செலவு ஆகும் என்பதால், தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே மகனை மட்டும் சென்னைக்கு அனுப்பினார். சிபாரிசுக்காக சந்திக்க வேண்டியவரை போய் பார்க்குமாறு மகனிடம் கூறினார். செந்திலும் அவருடைய விலாசத்தை வாங்கி வைத்துக் கொண்டான்.

புகை வண்டியில் செந்திலுடன் ஒரு பெரியவரும் பயணம் செய்தார். செந்திலும் அவரும் சிறிதும் நேரத்தில் பேச ஆரம்பித்தனர். “”நேர்முக தேர்வுக்கு முதல் நாள் கிளம்பினால் போதாதா?” என்று கேட்டார். உடனே செந்தில், சிபாரிசுக்காக தான் ஒரு நபரை சந்திக்கப் போவதாக கூறினான்.

“அந்த நபர் சிபாரிசு செய்தால் உனக்கு அந்த வேலை கிடைத்த விடுமா?” என்று கேட்டார் பெரியவர்.

“சிபாரிசு இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்று அப்பா சொல்கிறார்,” என்று இழுத்தான் செந்தில்.

“அப்படியென்றால் உனக்கு வேலை இதற்கு முன்பே, கிடைத்திருக்க வேண்டுமே,” என்று விடாமல் கேட்டார் பெரியவர்.

“எனக்கு பெரிய சிபாரிசு கிடைக்கவில்லை,” என்று சளைக்காமல் பதில் கூறினான்.

”வேலை கிடைப்பதற்கு நான் ஒரு வழி கூறுகிறேன். கேட்பாயா?” என்று கேட்டார் பெரியவர்.

”எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன்,” என்று உற்சாகமாக கூறினான்.

”சிபாரிசுக்காக நான்கு நாட்கள் அலைந்து திரிந்து வீண் செய்வதை விட வேறு விதமாக உழைக்கலாம்,” என்று பெரியவர் கூறினார்.

”எப்படி?” என்று ஆவலுடன் கேட்ட செந்திலை புன்னகையுடன் பார்த்தார் பெரியவர்.

”நிறுவனத்தில் யார் வேலை செய்கிறார்கள் என்று தேடிபிடித்து சிபாரிசுக்காக கெஞ்சி நிற்பதைவிட அந்த நிறுவனத்தை பற்றிய விபரங்களையும், நீ எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்திருக்கிறாயோ அதை பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள நேரத்தை செலவிட வேண்டும்… அதுவும் எப்படி?” என்று கேட்காதே.

“நீ கையில் வைத்திருக்கும் விலாசத்தை கிழித்துப் போட்டுவிட்டு ஒரு பெரிய நூலகத்தை தேடிச் செல்ல வேண்டும். இருக்கின்ற நான்கு நாட்களையும், வீணாக்காமல் நான் சொல்கிறபடி செய்தால் உனக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் பெரியவர்.

நிமிடங்களில் யோசனை செய்து பார்த்தான். “அப்பா சொல்லியபடி இதுவரை நடந்தபோதிலும் வேலை கிடைக்கவில்லை. பெரியவர் சொல்லியவாறு செய்து பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது.

“”உங்கள் அறிவுரைக்கு நன்றி. நீங்கள் கூறியபடியே நான் செய்கிறேன்,” என்று கூறி பெரியவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

தேர்வுக்கு முன்பிருந்த நான்கு நாட்களையும் நூலகத்தில் செலவிட்டான். நேர்முகத் தேர்வில் நிறுவனத்தை பற்றியும், அவன் பார்க்க போகும் வேலையை பற்றியுமே கேள்விகள் கேட்டனர். செந்தில் நிறைய கேள்விகளுக்கு பதில் கூறினான். தேர்வு நடத்தியவர்களும், “”வெரிகுட்” இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும் முன்பே நிறுவனத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாய். உன்னுடைய ஆர்வத்தை பாராட்டுகிறோம்,” என்று சொல்லி செந்திலை அனுப்பி வைத்தனர். அவர்களுடைய பாராட்டை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கு அப்போதே வேலை கிடைத்துவிட்டதை போல தோன்றியது. உற்சாகமாக ஊருக்கு திரும்பினான்.

அப்பாவிடம் நடந்தவற்றை கூற அவனுக்கு பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எனவே, அப்பா கொடுத்த விலாசத்தில் இருந்த நபரை சந்தித்ததாக பொய் சொல்லிவிட்டான். சரியாக பதினைந்து நாட்கள் முடிந்தும். அந்த நிறுவனத்திலிருந்து வேலையில் சேருவதற்கான உத்தரவு வந்து சேர்ந்தது. செந்திலுக்கு தலைகால் புரியவில்லை. அப்பாவிடம் ஓடிச் சென்று விஷயத்தைக் கூறினான்.

“இந்த முறை பெரிய சிபாரிசு போல் இருக்கிறது. அதான் வேலை கிடைத்திருக்கிறது,” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

“அப்பா, நீங்கள் நினைப்பது தவறு. நான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன்,” என நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினான் ராஜா. அவனுடைய அப்பா இதுநாள் வரை தன் மகனை தவறான பாதையில் கூட்டி சென்றதை நினைத்து வருத்தப்பட்டார். தன் மகனுக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்த பெரியவருக்கு மனதார நன்றி கூறினார்.

வேலையில் சேர்ந்த நாளன்று நிறுவனத்தின் முதலாளியை பார்க்க வேண்டும் என்று அவனுடைய மேலதிகாரி கூறினார். முதலாளியின் அறைக்குள் நுழைந்த செந்திலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவனுடைய முதலாளி வேறு யாருமில்லை, சென்னைக்கு வரும் வழியில் அவனுக்கு அறிவுரை சொன்ன அதே பெரியவர் தான் முதலாளியாக உட்கார்ந்திருந்தார்.

“அய்யா நீங்களா… உங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி! உங்களால் நான் வாழ்வு பெற்றேன்,” என்று கூறி அவர் காலில் விழுந்தான்.

”நேர்மையாய் இரு என்றும் உயர்வடைவாய்!” என்று கூறினார்.

Wednesday, August 24, 2016

sigappu kulla tamil story

சிவப்பு குல்லாவின் கதை!

டீதி என்ற நாட்டை டார்வின் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆணவத்தின் மொத்த உருவானவன். குடிமக்களுக்கு என்று எந்த நன்மையும் செய்யமாட்டான். டீதியை அடுத்த சின்னஞ்சிறு கிராமம் அது. தந்தையற்ற சிறுவன் ஜோன்ஸ். ஆறே வயது நிரம்பியவன். தன் தாய் பிலோமினாவுடன் அந்த கிராமத்தில் வசித்து வந்தான். ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் தன் அம்மாவுடன் டீதியில் உள்ள மாதா கோவிலுக்குச் செல்வான்.

“”அம்மா! நம்ம ஊர்லே மட்டும் ஏம்மா மாதாகோவில் இல்லை. நம்ம ஊர்லேயும் ஒரு மாதா கோவில் கட்டணும்மா,” என்று அடிக்கடி சொல்வான். அவன் மனம் நிறைந்த ஏக்கம் என்னவெனில் தன் கிராமத்திலும் இதைப் போல் ஒரு பெரிய அழகிய மாதா கோவில் கட்டணும். இந்த மாதா கோவில் சிலையைவிட பெரிய மேரியம்மா சிலை வைக்கணும். அவங்க கையிலே ரொம்ப அழகான வாயிலே விரல் சூப்பிக்கிட்டு இருக்கிற அந்த குட்டி குண்டு பாப்பா சிலை இருக்கணும். நான் வெள்ளை உடுப்பு மாட்டிக்கிட்டு… நிறைய மெழுகுவர்த்தி ஏத்திவெச்சு, ஊரெல்லாம் கூட்டி ஜெபம் பண்ணணும்,” என்பான். ஒரு ஆறு வயது குழந்தையின் மனதில்தான் என்னவொரு புனிதமான ஏக்கம்!

அன்று கிறிஸ்து மஸ்… இவன் கிராமத்திற்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தா எல்லாருக்கும் பரிசுகளை வழங்கிக் கொண்டு இருந்தார். சிறுவன் ஜோன்ஸ் முறை வந்ததும் ஒரு பரிசுப் பெட்டியை கொடுத்தார்.

“”ஊஹும். எனக்கு இந்த பரிசு வேணாம் தாத்தா,” என்றான்.

“”அப்படியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தா கொடுக்கும் பரிசை வாங்கிக் கொள்,” என்றாள் அம்மா பிலோமினா.

“”மகனே! இந்த பரிசு வேணாம்னா வேறு என்னதான் வேண்டும்? கேள் மகனே என்றார் கிறிஸ்துமஸ் தாத்தா.
“”எனக்கு உங்கள் தலையில் உள்ள தொப்பி தான் வேண்டும்,” என்றான்.
“”என்ன? இந்த தொப்பியா? அட… இந்த பழைய தொப்பியா, உனக்கு இது எதுக்கு ராஜா?”
“”எதுக்குத் தெரியுமா? இந்த தொப்பியை எடுத்துக்கிட்டு வீடு வீடா போவேன். இதுலே அவுங்க போடற காசையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேத்துவெச்சு… அப்புறம் தொப்பி நிறைய காசு சேர்ந்ததும்… அதை வெச்சு இந்த ஊர்லே ஒரு மாதா கோவில் கட்டுவேன். அதுலே ஒரு பெரிய மேரியம்மா பொம்மை… அவுக கை அணைப்பிலே அந்த அழகு பாப்பா பொம்மை வைப்பேன், அப்புறம் நா வெள்ளை உடுப்பு மாட்டிக்கிட்டு, இந்த ஊரையே கூட்டி மெழுகுவத்தி ஏத்தி வெச்சு ஜெபம் செய்வேன்.

“”அந்த கனவில் தன்னையே மறந்து நீளமாக பேசிக் கொண்டே போக… கூட்டத்தில் ஒரே சிரிப்பு!
அப்படியே அவனை அள்ளி அணைத்து “”நிச்சயமாக உன் ஆசை நிறைவேற கர்த்தர் அருள்புரிவார்!” என்று சொல்லி தன் தலையிலிருந்த தொப்பியை கழற்றி… அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டை போட்டு “”இது என் முதல் காணிக்கை,” என்று சொல்லி அவனிடம் கொடுத்தார்.
அதனுடன் ஏராளமான பரிசுப் பொருட்களையும் அவனுக்கு கொடுத்து அவனை மகிழ்வித்தார். அதன்பின் நேரம் கிடைத்த போதெல்லாம் தன் தொப்பியுடன் ஊரை ஒரு ரண்வுட் அடிப்பான். இவனைப் பற்றி தான் அந்த ஊர் மக்களுக்கு தெரிந்துவிட்டதே. அதனால் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு அவனின் தொப்பியில் காசு போடுவர். உடனே அதனை தன் குடிசையிலுள்ள சின்ன மண்கலயத்தில் போட்டு மூடி வைப்பான்.

ஓ! அன்று நகரத்திற்குப் போய் பணம் சேர்க்கும் எண்ணத்துடன் புறப்பட்டான் சிறுவன். திடீரென ரோட்டில் ஒரே சலசலப்பு… “”மன்னர் வந்து கொண்டிருந்தார். உம்… சீக்கிரம் அனைவரும் நகர்ந்து ஒரு ஓரமாக நின்று தத்தம் தலையிலுள்ள தொப்பியை கழற்றி விட்டு, சிரம் தாழ்த்தி மன்னருக்கு மரியாதை செய்யுங்கள்…” என்று கட்டளை இட்டுக் கொண்டே இரண்டு குதிரை வீரர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

அவசர அவசரமாக கூட்டத்தினர் தங்கள், தொப்பிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டு சிரம் தாழ்த்தி நின்றனர். சிறுவனும் தன் தலையில் இருந்த அந்த சிவப்பு நிற தொப்பியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு தலை வணங்கி நின்றான். மன்னனின் வெள்ளி கோச் வண்டி அவர்களை கடந்து சென்றுவிட்டதற்கு அறிகுறியாக குதிரைகளின் குளம் பொலியும்… வீரர்களின் வாழ்த்து ஒலியும் விண்ணை முட்டின என்றால் மிகையாகாது. திடீரென மன்னன் மிக ஆங்காரமாக கத்தினான்.

“”ஏய்! வண்டியை பின்புறமாக செலுத்து,” என்றான்.
“”என்ன விபரீதம்” என்று உள்ளூற திகைத்துக் கொண்டனர் அருகிலிருந்த மந்திரிகள். பின்னோக்கிச் சென்ற வண்டி சிறுவன் நிற்கும் இடத்திற்கு பக்கத்தில் சென்றதும் தலையில் சிவப்பு குல்லாயுடன் நிற்கும் சிறுவன் ஜோன்ஸைக் கண்டதும் கண்களில் அனல் பறக்க “”டேய்! உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி தலையில் குல்லாயுடன் நிற்பாய்?” என்றார்.

நடுநடுங்கிப் போனவன் சட்டென்று தன் தலையில் முளைத்திருந்த குல்லாயை எடுக்க… அக்கணமே அவன் தலையில் மற்றுமொரு சிவப்பு குல்லாய். இதனைக் கண்டு கூட்டம் வெலவெலத்தது… “”இந்த அயோக்கிய சிறுவனை அரண்மனைக்கு இழுத்து வாருங்கள்,” என்று கர்ஜித்தான்.
மிக முரட்டுத்தனமாக இரண்டு சிப்பாய்கள் சிறுவனை இழுத்துச் சென்று அரண்மனை முன் நிறுத்தினான். அரசபையிலும் வெளியிலும் ஒரே கூட்டம். மிக பீதியுடன் அழுது கொண்டே சபை நடுவே நிற்கப்பட்டிருந்த சிறுவனின் தலையிலிருந்த தொப்பியை எடுக்க அரசன் உத்தரவிட, சிப்பாய் ஒருவன் அதை எடுத்ததும்… இப்போது அந்த சிவப்பு குல்லாய்க்கு பதில் விலையுயர்ந்த ஒரு நீலக் குல்லாயை எடுக்க எடுக்க விதவிதமான நிறங்களில் ஒற்றைவிட ஒன்று மிஞ்சும் அழகிலும், மதிப்பிலும் இது என்ன மாயவித்தை. இது எப்படி சாத்தியம்? அரசருக்கு விசேஷமாக தொப்பி தயாரிக்கும் நிபுணர் அரண்டு போனார்.

“”மன்னா! இத்தனை உயர் ரக வேலைப்பாடுகளுடன் கூடிய விலை மதிப்புள்ள தொப்பிகளை மனிதர்களால் செய்யவே முடியாது,” என்று அடித்து கூறிவிட்டனர்.

“”இவன் ஒரு சூனியக்காரன். இவனை உயிரோடு விட்டு வைப்பது நம் நாட்டிற்கே ஆபத்து… இவனை அரண்மனை மேல் மாடத்திற்கு இழுத்து செல்லுங்கள். அங்கிருந்து தூக்கி கோட்டை வாசலைத் தாண்டி அகழியில் வீசி எறியுங்கள். அகழியிலுள்ள முதலைகளுக்கு இந்த சூனியக்காரன் ஆகாரம் ஆகட்டும்,” என்றான் அந்த கொடுங்கோல் அரசன்.

மேல்மாடத்திற்கு செல்லும் வழியெல்லாம் சிறுவனின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட தொப்பிகள்! மேல் மாடத்தில் மன்னன் தன் மந்திரிகள் புடைசூழ நிற்க மதிற்சுவர் ஓரமாக, முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நின்றிருந்தான் சிறுவன். உம். விசிறி எறியுங்கள் இந்த சூனியக்காரனை என்று அரசன் கர்ஜிக்க… கடைசியாக சிறுவன் தலையில் இருந்த தொப்பியை ஒரு வீரன் தட்டிவிட… இரண்டு வீரர்கள் சிறுவனை இருபுறமும் பற்றி சுழற்றி எறிய எத்தனிக்கும் தருணத்தில் அரசனின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன.

“”நிறுத்துங்கள்!” என்று அலறினான் அரசன். சிறுவனின் தலையில் இப்போது வீற்றிருப்பது விலை மதிப்பற்ற, கண்களைப் பறிக்கும் வைரங்களும், வைடூரியங்களும், பதிக்கப்பட்ட ஒரு வைரக் கிரீடம்! அதன் ஒளி அங்கே கூடியிருந்த அனைவரின் கண்களையும் கூசச் செய்தது. அந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டு விட வேண்டும் என்ற பேராசையில் தான் அந்த அரசர் “”நிறுத்துங்கள்,” என்று அலறினான்!

“”டேய்! பையா! உன் தலையிலிருக்கும் அந்த கிரீடத்தை எனக்கு கொடுத்து விடு இதற்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும்?”

“”எனக்கு ஒண்ணும் வேணாம். இந்த கிரீடத்தை நீயே வெச்சுக்கோ… நா மொதல்லே போட்டிருந்த அந்த சிவப்பு குல்லாயை அந்த கிறிஸ்துமஸ் தாத்தாகிட்டே கொடுத்துடு. அந்த குல்லாயிலே நிறைய பணம் சேத்து எங்க ஊர்லே ஒரு பெரிய மாதா கோவில் கட்டணும்னு நினைச்சேன். நா தான் சாகப்போறேனே. இனிமே யார் கட்டப் போறாங்க. ரோஸி அக்கா வீட்லதான் என் அம்மா வேலை செய்யறாக… அவுகளுக்கு செய்தி சொல்லிடு. முகத்தில் எவ்வித சலனமுமின்றி சிறுவன் மழலையில் மிழற்ற மிழற்ற அப்படியே பதறினான் மன்னன்.

“”ஓ! இந்த சின்னக் குல்லாயில் பணம் சேர்த்து நிச்சயமாக இது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குல்லாய். இல்லையெனில் எப்படி இத்தனை அபூர்வ வகை குல்லாய்கள் இவனின் தலையில் தோன்றிக் கொண்டே இருக்குங்களே? இந்த விலை மதிப்பற்ற தங்கக் கிரீடத்தை நீயே எடுத்துக் கொள்ளுங்கள்.

“”என்னை கொல்லாமல் விட்டு விடு. இந்த குல்லாய்க்கு நிறைய பணம் கொடு என்று என்னிடம் பேரம் பேசலாமே? பேசவில்லையே… ஏன்? எதற்காக? யாருக்காக இவன் சிலுவையை சுமக்கிறான்? மன்னனின் நீர்பூத்த கண்களில் சிறுவன் தெரியவில்லை. அந்த விலைமதிப்பற்ற கிரீடத்தை அணிந்து கொண்டு நின்றது மாட்டுத் தொழுவத்தில் உதித்த அந்த தேவகுமாரன்தான்!

தன்னையும் மீறி “”ஜீஸஸ்…” என்று அலறிய படியே அச்சிறுவனை வாரி அணைத்துக் கொண்டான்! அடுத்த அரை மணி நேரத்தில் தன் மந்திரி பிரதாணிகளுடன் சிறுவனின் கிராமத்தை நோக்கிச் சென்றது அரசனின் வெள்ளிகோச். அதில் அரசனின் மடியில் சிறுவன். ஊரே கூடி அரசனை வரவேற்றது. அந்த குல்லாய் பயலை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தது.

அடுத்து வந்த நாட்களில் அந்த கிராமமே புதுப்பிக்கப்பட்டு விட்டது. மிகப் பெரிய மாதாகோவில் எழும்பியது. கிறிஸ்துமஸ் குல்லா தாத்தா தான் வெள்ளை உடுப்பு போட்டுகிட்டு பூசை செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவன்… அவருக்கு இணையாக தானும் வெள்ளை உடுப்பை மாட்டிக் கொண்டு பூசை நேரத்தில் அவருக்கு உதவுவான்.

பின்னர் போப்பாண்டவரின் ஆசியுடன் வாடிகனிலிருந்து வந்த பிஷப் ஆண்ட்ரூ தான் இக்கோவிலின் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து பயிற்சி பெற்ற சிறுவன் பிற்காலத்தில் பாதர் ஆகி இக்கோவிலை நடத்திய காலத்தில் இந்த தேவாலயத்தில் அந்த குட்டிப் பாப்பாவும் அவனின் அம்மாவும் நடத்திய அற்புதங்களுக்கு எல்லையே இல்லை. உலகின் பல பாகங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து கூட ஆரம்பித்தனர்.